
அப்துல் ஹக்கீம்
ஐக்கிய நாடுகளின் போதை மற்றும் குற்றத் தடுப்பு நிறுவனம் (UNODC) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகளவில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட பறவைகளாக சிக்கித் தவிக்கின்றனர்.
சர்வதேச அளவில் ஆண்டு தோறும் ஜூலை 18 ஆம் நாள் நெல்சன் மண்டேலா தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதி வழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.
பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் விடுதலையாகி குடியரசுத் தலைவரானார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
இவர் கைதிகளை நடத்தும் விதிமுறைகளைக் கொண்டு வந்தார். இதனடிப்படையில் சிறைதுறைகளில் பல மாறுதல் கொண்டு வரப்பட்டது.
கடந்த வருடம் சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தின் போது ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையின்படி சிறைவாழ்க்கை போக்கினை ஆராயும்போது உலகளவில் மக்கள் தொகை 2000 முதல் 2019 வரை 21 சதவீதத்தினைத் தொடும் நிலையில், உலகளவில் வாழும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 25 சதவீதத்தை தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது. இறுதியாக வெளிவந்த கணக்கெடுப்பின் படி சிறைவாசிகளின் எண்ணிக்கை 11.7 மில்லியன் உள்ளது. இந்த எண்ணிக்கையானது பொலிவியா, புருண்டி, பெல்ஜியம் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் தொகைக்கு இணையானது.
இந்த நாடுகளில் வாழும் மக்களில் பத்தாயிரம் நபர்களில் 152 நபர்கள் சிறைக் கைதிகளாக வாழ்கின்றனர் என்பதை 2019 ஆம் ஆண்டின் சமீபத்திய அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் வடக்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா நாடுகளில் சிறைவாசிகளின் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் உலக கைதிகளில் 93 சதவீதம் ஆண்களே உள்ள நிலையில் சமீப காலங்களில் பெண்கள் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
நெல்சன் மண்டேலாவின் சிறை விதிமுறைகளின் படி, சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி சிறையில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருக்கக் கூடாது. ஆனால் தற்போது உலக நாடுகளில் சிறைத் துறையில் அதிக எண்ணிக்கையில் நெரிசலுடன் போதிய இடமின்றி கைதிகள் வாழ்கின்றனர்.
கொரானாவும் சிறை வாழ்வும்…..
கொரானவிற்குப் பின் உலகமே மாற்றத்தினை அடைந்திருக்கும் நிலையில் சிறைத்துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சிறைவாசிகளின் எண்ணிக்கை-நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
உலகளவில் அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி மே மாத இறுதியில் 122 நாடுகளில் 550000 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல சிறைகளில் உள்ள கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயன்று அது வன்முறைச் சம்பவமாக மாறியுள்ளது.
இதன் நீட்சியாக 47 நாடுகளில் கிட்டத்தட்ட 4000 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர். கொரானாவுடைய கோராதாண்டவத்தினை கண்டு அஞ்சிய சிறைத்துறை கொரானா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளையும் மாறுதல்கலையும் கொண்டு வந்தது.
குறிப்பாக மறுவாழ்வு புனரமைக்க பயிற்சி வகுப்புகளும் உறவினர்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்தது. மேலும் கொரோனா நோய்தொற்று பரவுதலை தடுக்கும் பாணியில் சிறைகளில் வாழும் கைதிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தற்காலிகமாக பல கைதிகளை விடுதலை செய்தது. மார்ச் மாதத்திலிருந்து உலக சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 6 சதவீதம் அதாவது அரசு உத்தரவின் படி அவசரமாக சுமார் 700000 கைதிகளை தற்காலிகமாக 119 மாநிலங்களில் விடுதலை செய்தது. எனவே இப்பேரிடர் காலங்களில் நம்மை மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் அவர்கள் சார்ந்துள்ள பிரச்னைகளை புரிந்து கொள்வதன் மூலம் வாழ்கையின் எதார்த்தத்தை உணரலாம்.
































