பெரும்பான்மைவாதிகள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றிவிட முடியும். அப்படிச் செய்யக் கூடாது என்ற பொறுப்பு இருப்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும். எனவே நிலையான அரசைவிட பொறுப்பான அரசுதான் தேவை. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது அரசியல்சாசனத்தில் உள்ள சமூகநீதியின் ஆன்மாவைச் கொல்வதைப் போன்றது. நாம் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்ற உளவியலைத் தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீதும் இந்த சமூகம் பன்னெடுங்காலமாகச் சுமத்தியிருக்கிறது. அந்த உளவியலிலிருந்து விடுபட ஒருவருக்கு கல்வி அவசியம். நான் பெற்ற கல்வியால் அந்த உளவியலிலிருந்து விடுபட்டுவிட்டேன். அனைவரும் இந்த உளவியலிலிருந்து வெளியேறினால்தான் சமத்துவமும் சுதந்திரமும் கிடைக்கும். சாதி மத வேறுபாடுகளைத் துறந்து அனைவரும் ஒன்றான பிறகுதான் சகோதரத்துவம் மலரும்.

































