சும்மா இருப்பவர்களையும், சோம்பேறிகளையும் நோக்கி வீசப்படும் கேள்வி ஏன் சோகமாக இருக்கிறாய்? என்பதுதான் காரணம் சோம்பல் வாழ்வில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். வறுமையில் இருப்பவரைக் கூட சுறுசுறுப்புடன் பார்த்தால்…. அவரிடம் என்ன ரொம்ப விசேஷம் போல தெரியுது !!!” என்று தான் மகிழ்ச்சியுடன் கேட்பார்கள்.
நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் மற்றவர்களை மகிழ்ச்சியாய் மாற்றுவதற்கும்
ஒரு அற்புத மருந்து சுறுசுறுப்பு. இந்த சுறுசுறுப்பை வெளியே இருந்தோ அல்லது விலை குடுத்தோ யாராலும் வாங்கிவிட முடியாது.
சுறுசுறுப்புக்காக கிளப்புக்கும் ஜிம்முக்கும் எல்லோராலும் போகவும் முடியாது. அப்படி போனாலும் அதனுடைய பலனை முழுவதுமாக அடையவும் முடியாது.
ஒருவர் சுறுசுறுப்பாய் இருப்பதற்கு எந்த செலவும் தேவையில்லை. எல்லோருக்கும் இயலுமான ஒன்று இருக்கிறது. அது நடைப்பயிற்சி.
நடையால் நம் உடல் எடையை மட்டும் இல்லை, உள்ளத்தையும் நலமுடன் வைத்து கொள்ள முடியும்.
நாம் வாழும் இன்றைய நாட்களில் பல அகால மரணங்கள், நம்மிடம் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.
உடல் உழைப்பில்லாமல் ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டதாக மருத்துவ உலகம் பட்டியலிட்டுச் சொல்கிறது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் இன்று வித விதமான நோய்கள் அதிகமாகி விட்டது.
நம்மில் ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும்
அஸ்திவாரமே ஆரோக்கியமான வாழ்க்கை தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.
அந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன் படுவது எளிமையான, எந்தவித செலவும் இல்லாத எளிமையானது நடை பயிற்சி.
பெருத்த இடை மெலிந்த தொடையாக அழகு நடை அன்ன நடையாக பலர் அழகாக உலா வருவதற்கு நடையே முக்கிய காரணம்.
நடை பயிற்சின் பொழுது சூரிய கதிர்கள் உடலில் பட்டு எலும்புகளுக்குத் தேவையான சக்திகள் கிடைத்து, எலும்புகளும் வலு அடைகிறது.
தொந்தியைக் குறைத்து உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இருதய அடைப்பு பக்கவாதம் போன்ற கொடிய நோய்கள் தீண்டாமல் நம்மை நாம் பாதுகாத்து கொள்ள உதவுகிறது.
மன அழுத்தம், மனப் பதற்றம் போன்றவைகள் இல்லாமல் எண்டோபின் என்ற அற்புத சுரபி அதிகரித்து நல்ல மனநிலையை உண்டாக்கி உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகிறது.
,
நமது மூளையின் செயல்திறனை அதிகரித்து நாம் சிறப்பாக செயலாற்றவும் நடை பயிற்சி தான் உதவுகிறது.
மூட்டு வலி முதுகு வலி எலும்பு வலி என உடலில் எந்த வலிகளும் இல்லாமல் செரிமானம் முறையாக ஆக்கப்பட்டு அஜீரணமும் குறைபாடும் இல்லாமல் போய்விடுகிறது.
நடைப் பயிற்சி மேற்கொண்டு வாழ்பவர்களின் முதுமையைத் தள்ளிப்போட்டு இளமையோடும்
இருக்க செய்கிறது.
நுரையீரலின் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்க செய்து (Increases Lung capacity) தசைகளுக்கும் வலிமையைக் கொடுத்து உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட வைகிறது.
நடை பயிற்சி ஒருவரின் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக் குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கி அவர் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதியோர்களுக்கான பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு ஒன்று, இளம் வயதிலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாகத் தடங்கலின்றி இயங்குவதாகத் தெரிவிக்கிறது. அவர்களின் இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது.
பெரும்பாலான நாடுகளில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைப்பயிற்சியும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஒருவர் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள ’ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) பகுதி சிறப்பாகச் செயல்படுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
ஹிப்போகாம்பஸ் பகுதி பல உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்குக் காரணமானது. இது முக்கியமாக ஞாபக சக்தியுடன் தொடர்புடையது. என்பதை நாம் கவனிக்க வேண்டியது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மருந்து மாத்திரைகளை மட்டும் நம்பி வாழாமல் தினமும் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
புகழ் பெற்ற டையபெடோலோஜி (Diabetology) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ‘சாப்பிட்ட பிறகு 10 நிமிட நடைப்பயணம் செய்தால் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது என்றும் அது கூறுகிறது.
நடைப்பயிற்சி செய்யும் போது, அதற்கு ஏற்ற காலுறைகளையும் காலணிகளையும் பயன்படுத்துவது முக்கியம். பொருத்தமான உடைகளை அணிந்துகொள்வதன் மூலம் நடை மீது ஆர்வமும் தொடர்ந்து செய்யும் மன நிலையும் உண்டாகும்.
நாலைந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக கூட நடைப்பயிற்சி செல்வதும் நல்லது தான். ஆனால் அதற்காக பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல. பேசிக்கொண்டே நடப்பதால், நடைப்பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகளவில் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைய வாய்ப்புகள் இருக்கிறது.
நடக்கும் போது நிலம் சமமான தரையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதியவர்கள் சம தரையில் நடப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
திறந்த மைதானத்திலோ அல்லது வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்களிலோ தான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. பல வித பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங்களின் நல்ல வாசனையும் கிடைத்து நடைப்பயிற்சி செய்வது இன்னும் அதிகம் பலன்களைக் கொடுக்கும்.
ட்ரெட்மில் இருக்கிறதே வீட்டுக்குள்ளேயே நடக்கலாமே என நினைப்பு உள்ளவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.
வெளியில் நடக்க முடியாத சூழலில் இருப்பவர்களும் தனிமையில் வாழ்பவர்களும் பாதுகாப்பை முன்னிட்டு இயந்திரத்திலாவது நடக்கவேண்டியது அவசியம். ஆனால் அதுவே போதும் என்று எல்லோரும் இருந்து விடக் கூடாது.
உடலை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் நடப்பதே நடைப்பயிற்சி!
கைகளை வீசி வேகமாக நடக்கும் போது, அது நடப்பவரின் செயல் திறனை அதிகரிப்பதோடு, சுத்தமான காற்றுடன் உடலின்
5 முதல் 10 சதவீத கலோரிகள், கூடுதலாகவும் எரிக்கப்படுகிறது.
புதிதாக நடைபயிற்சி செய்யத் தொடங்குபவர்கள், சிறிது சிறிதாக தான் நடக்கும் தூரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நடக்கிறேன் என்று ஆர்வக் கோளாறில் முதல் நாளே பல கிலோ மீட்டர் தூரம் தொடங்கினால், சில நாளுக்கு பிறகு நடை பயிற்சி தொடராது .
நடைப்பயிற்சி செய்வதற்கு முன்னர், முடிந்தால் எளிய ஸ்ரெட்சிங் பயிற்சிகள் (Stretching Exercises) செய்வது நல்லது. அது நாம் பள்ளிகளில் கற்ற பயிற்சிகளாக கூட இருக்கலாம்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடை பயிற்சியை நடை முறை படுத்த முடி யாதவர்களும், இயந்திரம் வாங்க முடியாதவர்களும், நம்மால் முடிந்த இடங்களில் 8 வடிவ எளிய பயிற்சியை கூட செய்யலாம்.
நம் வீட்டில் உள்ள இடத்தில் சுமார் 10 அடி இடத்தில் 8 என்னும் வடிவத்தை சாக்பீஸால் வரைந்து கொண்டால் போதும்.
அகலம் குறையும் போது மிகவும் குறைந்த வட்டப்பாதையில் நடக்கும் போது சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
இடத்தின் வசதிக்கு ஏற்ப அளவுகளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். தரையில் சாக்பீஸால் கூட 8 வரைந்து கொள்ளலாம்.
நடைபயிற்சியின் போது நமது கண்கள் 8 வடிவ கோடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் கண்களில் உள்ள கருவிழி அனைத்து பக்கமும் அசைந்து கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து நமது பார்வைத் திறனை அதிகரிக்கும்.
குறிப்பு 8 வடிவ நடை பயிற்சியின்போது காலில் செருப்பு போடாமல் வெறும் காலில் தான் நடக்க வேண்டும்.
அவ்வாறு நடக்கும்போது பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உள் உறுப்புக்கள் நன்றாக செயல்பட்டு நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
நுரையீரல் பலவீனம் உள்ளவர்கள் 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அது விரைவில் குணமடையும்.
இம் முறையான நடை பயிற்சிகளை நாம் தொடர்வதன் மூலம் தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப்பிரச்சனை, தைராய்டு பிரச்சனைகள், சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்புக்கோளாரு, சிறுநீரகப் பிரச்சனை, கண் பார்வை போன்ற பல பிரச்னைகள் சரியாகும் என அந்த துறை வல்லுநர்கள் சொல்கின்றனர்.
இவ்வாறு நாம் நடை பயிற்சியினை மேற்கொண்டு நோய் இன்றி ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கு . இன்று முதலாவது இறை கருணையால் முயற்சி செய்வோம்.



































